4 August 2012

“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”


“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”

"சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்"

அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள். இப்படி குர்ஆனை ஓதுவது பற்றிய நன்மைகளை நாம் அதிகம் தெரிந்திருக்கின்றோம். அதனால் குர்அனை தஜ்வீத் முறைப்படி பல தடவைகள் ஓதி முடித்தும் இருக்கின்றோம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.ஆனால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும். சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும். இவ்வாறுதான் குர்ஆனை நாம் அணுக வேண்டும். இவ்வாறில்லாமல் அவசர அவசரமாக கருத்துணராமல் அரபியில் மட்டும் அல்லது மொழியாக்கத்தை வேகம் வேகமாக படித்து முடிப்பதினால் குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கத்தை நாம் முழுமைப்படுத்த முடியாது. இதனால்தான் குர்ஆனை ஓதிக்கொண்டே குர்ஆனுக்கு மாறு செய்கின்றோம். குர்ஆனை ஓதிக் கொண்டே வட்டி கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் அதிகம் இருக்கின்றார்கள். இவ்வாறே கொலை, கொள்ளை, விபச்சாரம், ஏமாற்று என்று மாபாவச் செயல்களை செய்யக்கூடியவர்கள் நம்மில் அதிகரிக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நாள்தோறும் குர்ஆனை ஓதக்கூடியவர்கள் தான். குர்ஆனை ஓதியும் இவர்கள் இம்மாபாவச் செயல்களை விடாமலிருப்பதற்குக் காரணம், குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கவில்லை என்ற ஒரே காரணம்தான். குர்ஆனை கருத்துணர்ந்து, நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் நாம் திருந்த முடியும் இன்ஷா அல்லாஹ். கருத்துணர்ந்து குர்ஆனை படிக்க வேண்டும் என்கிற வசனங்களையும், நபிமொழிகளையும் இனி தெரிந்து கொள்வோம்.

இறை வாக்குகள் 

1. (நபியே! குர்ஆனாகிய இது) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம். (அல்குர்ஆன் 38:29) குர்ஆனை ஓதுவதால் அதிக நன்மை இருக்கின்றது என்பதில் கொஞ்சம்கூட ஐயமில்லை, அப்படி இருந்தும் இப்புனிதமிக்க குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அடிப்படை நோக்கம், சிந்திப்பதற்கேயன்றி வெறும் கருத்துணராமல் ஓதுவதற்கு மாத்திரமல்ல என்பதை மேலுள்ள திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது. ஹஸனுல் பஸரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் சட்டதிட்டங்களை பாழ்படுத்திவிட்டு அதன் எழுத்துக்களை மாத்திரம் மனனம் செய்வது குர்ஆனை சிந்திப்பதாகாது. கருத்துணராமல் குர்ஆனை ஓதக்கூடியவர்களில் ஒருவர், நான் குர்ஆன் முழுக்க ஓதிவிட்டேன் எனக்கூறுகின்றார். ஆனால் அவருடைய வாழ்க்கையில் அதில் கூறப்படும் நல்லொழுக்கங்களோ, அமல்களோ காணப்படவில்லை!.

2. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82) இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது கூறுகின்றார்கள்: அல்லாஹ் தன் அடியார்களை இக்குர்ஆனை சிந்திக்கும்படியும் அதன் தீர்க்கமான கருத்துக்களையும் இலக்கிய வசன நடைகளையும் உணராமல் அதை புறக்கணிப்பதையும் அல்லாஹ் தடுக்கிறான். இது குர்ஆனை கருத்துணர்ந்து படிக்கும்படி ஏவப்பட்ட தெளிவான ஏவலாகும்.

3. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24) 

4. நாம் யாருக்கு வேதத்தை கொடுத்தோமோ அத்தகையோர் – அவர்கள், அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள்தான் இதை (அல்லாஹ்வின் வேதமென) விசுவாசிப்பார்கள். மேலும் (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ, அத்தகையோர் தாம் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 2:121) இந்த வசனத்திற்கு இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தை குறிப்பிடுகின்றார்கள்: (என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக! குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி என்பது, அது ஹலாலாக்கியதை ஹலாலாக்குவதும், அது ஹராமாக்கியதை ஹராமாக்குவதும் அல்லாஹ் இறக்கிய முறைப்படி ஓதுவதுமாகும்.) ஷஃகானி(ரஹ்) அவர்கள்: (அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள்) என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்கும்போது, (அதில் உள்ளதைக் கொண்டு அமல் செய்வார்கள்) என்பதுதான் அதன் விளக்கமாகும். ஆகவே அமல் அறிவுக்குப் பிறகுதான் ஏற்படும். அறிவு சிந்திப்புக்கு பின்புதான் ஏற்படும் என்கிறார்கள்.